சனி, 22 செப்டம்பர், 2012

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் தேசம்!’

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் தேசம்!’:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 8
கடந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட மேலான நிலையில் இந்தியாவில் கல்வியும் தொழில்நுட்பமும் இருந்திருக்கிறது என்று சொல்லும்போது அதை மறுதலிப்பவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், என்னதான் உயர்வாக இருந்திருந்தாலும் மனித மலத்தை மனிதரையே அள்ள வைத்த (வைக்கும்) தேசம்தானே என்பதுதான். பெரியாரியவாதியாக இருந்தால் பிராமணர்கள்தான் அதற்குக் காரணம் என்றும் அம்பேத்காரியவாதியாக இருந்தால் சாதி இந்துதான் அதற்குக் காரணம் என்றும் இருக்கும் இடத்துக்கு ஏற்பத் தங்கள் வாதத்தை முன்வைப்பார்கள்.
மலத்தை அள்ளியவர்கள் தங்கள் தொழிலில் இருந்த இழிவை அகற்ற என்ன முயற்சிகள் எடுத்தார்கள்? நாலைந்து பன்றிகளைக் கயிற்றில் கட்டி வந்து சுத்தம் செய்ய வைத்திருக்கலாமே? சிந்து – சரஸ்வதி நாகரிக காலத்திலேயே கழிப்பறையில் இருந்து கழிவு நீர் ஓடை வழியாகச் சென்று ஒரு கால்வாய்வழியாக ஊருக்கு ஒதுக்குப் புறத்துக்குக் கொண்டுசெல்லும் வசதி இருந்ததே… அது பின்னர் எப்படி மறைந்து, மறந்து போனது? இது போன்ற என்ற எளிய கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தாலும் எண்ணற்ற விடை தெரியாத கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
அத்தகைய இழிநிலையை முக்கிய காரணமாக முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தலித் விடுதலைப் போராட்டத்தினால் மலம் அள்ளும் தொழிலில் என்ன மாற்றம் வந்துவிட்டிருக்கிறது? வலிமை வாய்ந்த தலித் தலைவர் இருக்கும் உத்தரப் பிரதேசத்திலும் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை இன்றும் நடக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீட்டில் எத்தனை தோட்டி வர்க்கத்தினர் பயன் பெற்று மேலே வந்திருக்கிறார்கள்? தலித் என்ற அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சாதியினர் அனைவருமே இதை ஒரு தலித் பிரச்னையாகப் பார்க்கிறார்களா? பல்வேறு வேலைகளுக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையிலும் ஒருவர் அந்த வேலையைச் செய்வதன் காரணம் என்ன?
மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது பெருமளவுக்கு முடிவுக்கு வந்ததற்கு ஃபிளஷ் அவுட் டாய்லெட் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுதானே காரணம். எதிர்ப்பு அரசியலை முன்வைத்துப் போராடியவர்கள் அதில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லையே? மேலும் சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பை அள்ளுதல் என அந்த அவலத்துக்கு இணையானவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் சளைக்கவில்லை என்பது வேறு விஷயம். எந்தவித தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் அவர்களை விடுவித்திருக்கவில்லையே.
உண்மையில் ஆலய நுழைவுப் போராட்டத்தைவிட இந்த அவலத்தை நீக்குவதற்கான போராட்டம்தானே காந்தியாலும் பெரியாராலும் முதலில் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? இன்றும் கூட போலியோ இல்லாத தேசம் என்பதற்குத் தருவதைவிட நூறு மடங்கு அதிக கவனத்தை இந்த விஷயத்துக்குத்தானே தரவேண்டும்? ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் மீண்டும் பிரிட்டிஷாரின் காலத்துக்குத்தான் போயாக வேண்டும்.
அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனித மலத்தை மனிதரே அள்ளுவது என்பது இந்தியாவில் அதுவும் இந்து சமூகத்தில் மட்டுமே இருந்த அவலம் அல்ல. பிரிட்டனில் நைட் சாயில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மலத்தை அங்கும் மனிதர்கள் வெறும் கைகளால்தான் சுத்தம் செய்திருக்கிறார்கள். மேட்டுக்குடியினர் அதிகமான குளிரில் வெளியில் செல்வதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதை எடுத்துச் செல்வதற்கு மக்களில் இருந்து ஒரு பிரிவினரைத்தான் நியமித்திருக்கிறார்கள். குலத்தொழிலாகவே அது தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. டிரம்களிலும் வாளிகளிலும் எடுத்துச் சென்ற மலத்தை வைத்து உரம் தயாரித்திருக்கிறார்கள்.
ஜப்பானில் மேட்டுக்குடியினரின் மலத்தில் புரதச் சத்து அதிகம் இருக்கும் என்பதால் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்துக்கு அதிக கிராக்கி இருந்திருக்கிறது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் மனிதர்கள்தான் அந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். உலகின் வேறு எந்த நாட்டிலும் அந்தப்பணியில் ஈடுபட்டவர்கள், மன்னராகவோ, நிலப்பிரபுவாகவோ, பாதிரியாராகவோ, மவுல்வியாகவோ ஆனதாக பெரிதாக எந்த ஆவணமும் இல்லை. இந்தியாவில் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது என்பது பிரிட்டிஷார் காலத்தில்தான் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டு அரசுத்தொழிலாக அங்கீகாரம் பெற்று நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முன்புவரை திறந்த வெளிகளில் மலம் கழிப்பதுதான் பரவலாக இருந்துவந்திருக்கிறது.
ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த அவலம் இன்று முற்றிலும் ஒழிந்துவிட்டிருக்கிறது. அல்லது இந்தியாவைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியா இன்றும் ஒப்பீட்டளவில் இந்த அவலத்தைத் துடைப்பதில் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், நவீன யுகத்துக்குள் நாம் காலடி எடுத்துவைத்த விதத்தில்தான் அதற்கான விடை இருக்கிறது. அந்த, முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டிருக்கிறது.
இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய நவீன கல்வியானது நமது கடந்த காலத்தை இருண்ட காலமாகவே சித்திரித்தது. அந்தக் கல்வியில் முதலும் முடிவுமாக நமக்குச் சொல்லித்தரப்பட்டது என்னவென்றால், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், இழிவானவர்கள் என்பதுதான். அதனால் இந்திய அறிவுத் துறையானது அதன் பாரம்பரிய விஷயங்களில் இருந்து இயல்பாக அடுத்த கட்டத்துக்கு வளராமல் நம் கடந்த காலத்தை முற்றாக ஒதுக்கியது. தேவையற்ற அதீத குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்தது.
ஒரு வசதிக்காக இந்தியர்களை பிராமணர்கள், அ-பிராமணர்கள் என்று பிரித்துக்கொள்ளலாம். பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து பிராமணர்களில் பெரும்பாலானோர் மிகுந்த பதற்றத்துடன் தமது வேர்களில் இருந்து தம்மை முற்றாகத் துண்டித்துக்கொண்டு ‘நவீனமயமானார்கள்’. கம்பனையும் காளிதாசனையும் படிக்காமல் ஷேக்ஸ்பியரையும் பைரனையும் கரைத்துக் குடித்தனர். சமஸ்கிருதத்தைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலத்துக்குத் தாவினர். இசை, கட்டடக்கலை, மருத்துவம், விவசாயம் என எந்தத் துறையை எடுத்தாலும் நமது கடந்த காலச் சாதனைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு மேற்கத்திய நகல்களாக ஆனார்கள்.
அ-பிராமணர்களில் பெரும்பாலானவர்களோ இந்தியாவின் கடந்த காலத்தை பிராமண ஆதிக்கம் நிறைந்த ஒன்றாகப் பார்த்து அதை முற்றாக நிராகரித்தனர். சாதி, பெண்கள் நடத்தப்பட்டவிதம்  போன்றவற்றில் உலகம் என்ன நிலையில் இருந்தது… இந்தியா என்ன நிலையில் இருந்தது… இந்தியாவில் இருந்த நிலைக்கு உண்மையில் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு சாதிதான் காரணமா என்ற எந்த கேள்விக்கும் நியாயமான பதிலைத் தேட முயற்சி செய்யாமல் வெறுப்பு அரசியலில் இறங்கினர். இந்தியாவின் சமூக, அரசியல் தளத்தை அந்த மனோபாவமே முழுவதும் ஆக்கிரமித்தது. அப்படியாக இரண்டு க்ரீமீ லேயரும் இந்தியாவின் கடந்த காலத்தைப் பழிப்பதையே தமது அறிவுசார் செயல்பாடாக எடுத்துக்கொண்டன. இதனால், இந்தியாவின் நிகழ்கால விஷயங்களில், இந்திய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு யாருமே இல்லாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது.
சுதந்தரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் மலம் அள்ளும் தொழிலையும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலையும் நவீனப்படுத்த எந்தவொரு முயற்சியும் இந்த இரு தரப்பினரால் எடுக்கப்பட்டிருக்கவே இல்லை (Sulabh கழிப்பறைகள் போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக). ஆண்டுக்கு 300 நாள்கள் வெய்யில் பொரிந்து தள்ளுமொரு நாட்டில் அதில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு பதிலாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நலனுக்கு உகந்த திட்டங்களில் சொந்த மக்களைப் பணயம் வைக்கும் நிலைக்குப் போய்விட்டிருக்கிறது. நேற்று காலனி ஆதிக்கத்தின் இசைக்கு ஏற்ப ஆடினார்கள். இன்று உலகமயமாக்கலின் இசைக்கு ஏற்பக் கூத்தாடுகிறார்கள்.
உண்மையில் மேற்கத்திய கல்வியானது ஒருவகையில் நமது கடந்த கால பிழைகளை எல்லாம் களைந்து நம்மை மேம்படுத்த உதவியிருக்கவேண்டும். ஆனால், அப்படியும் நடக்கவில்லை. அதாவது, நமது கடந்த காலத்தின் நல்ல அம்சங்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷ் சமூகத்தின் நல்ல அம்சங்களும் நமக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. இந்தப் பிறழ்வே நம் இன்றைய பிரச்னைகளுக்கு முக்கியகாரணமாக இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் கடந்த காலமும் நிகழ்காலமும் இந்த அளவுக்கு ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டிருப்பதாக இல்லை.
பிரிட்டனில் கடந்த காலத்தில் மலம் மனிதர்களால் அள்ளப்பட்டதை தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பப் பின்னடைவாகவே பார்த்திருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை நோக்கி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நகர்ந்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில், அந்தச் செயலானது இந்தியாவுக்கு மட்டுமே உரிய அவமானமாக முத்திரை குத்தப்பட்டது. ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்றுக்கொண்டு சோர்ந்து முடங்கியது. உலர் கழிபறைக்கு மாற்றாக நீர்-கழிப்பறை 1596-ல் பிரிட்டனில் ஜான் ஹேரிங்டனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆகும் செலவும் அதிகம் இல்லை. இருந்தும், அதன் பிறகு 182 ஆண்டுகள் வரை அது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறாமல்தான் இருந்திருக்கிறது. மனித இனம் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது பல புரியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாமே “ஆதிக்க சக்தி’யின் சதியாகவே இருப்பதில்லை.
இன்று, பிராமண அறிவுவர்க்கம் உலகமயமாக்கல் பேருந்தின் படிக்கட்டில் தொற்றிக்கொள்ளவாவது இடம் கிடைத்துவிடாதா என்று விழுந்தடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அ-பிராமண அறிவு வர்க்கம் மாய எதிரியை உருவாக்கி அட்டைக்கத்தியைச் சுழற்றிப் போராடி வருகிறது. நேற்று காலனி ஆதிக்க சக்திகளின் இடத்தை இன்றைய உலகமயமாக்கல் சக்திகள் பிடித்துவிட்டிருக்கின்றன. இரண்டிலும் பாதிக்கப்படுவதென்னவோ பாவப்பட்ட நாம்தான். என்று இந்தியாவின் கடந்த காலம் குறித்த பிழையான எண்ணங்களை மாற்றிக் கொண்டு உண்மையான எதிரியைப் புரிந்துகொண்டு பிராமண, அ-பிராமண வர்க்கங்கள் கை கோக்கிறதோ அன்றுதான் நமக்கு விடிவு பிறக்கும். இல்லையென்றால், யது வம்சத்துக்கு நேர்ந்ததே நமக்கும் நேர்ந்துவிடலாம்.
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக