சனி, 22 செப்டம்பர், 2012

பிரிட்டன் வருகைக்கு முந்தைய கல்வி நிலை

பிரிட்டன் வருகைக்கு முந்தைய கல்வி நிலை:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் – 3
லண்டனில் 1931-ல் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸ், சாட்டம் ஹவுஸில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் காந்தியடிகள் உரையாற்றினார். அதில், இந்து, முஸ்லிம், சீக்கியப் பிரச்னை பற்றிப் பேசினார். தீண்டாமை பற்றிப் பேசினார். மோசமாகிக் கொண்டே போகும் இந்தியாவின் ஏழைமை பற்றிப் பேசினார். இந்திய மக்கள் தொகையில் 85% பேர் வசிக்கும் கிராமங்களின் நிலை பற்றிப் பேசினார். பிரச்னைகளைப் பட்டியலிட்டதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ‘ஆக்கபூர்வமாக நாம் செயல்படவேண்டியிருப்பதோடு சிலவற்றை அழிக்கவும் வேண்டியிருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது ராணுவ, அரசு நிர்வாகச் செலவுகள். என்னிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால் இந்த செலவுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிடுவேன்’ என்று கூறினார். அரசு நிர்வாகச் செலவு என்று எதைச் சொன்னார் தெரியுமா… பிரிட்டனில் பிரதமருக்கு அப்போது தரப்பட்ட சம்பளம் சராசரி மனிதருக்குக் கிடைத்ததைவிட ஐம்பது மடங்கு அதிகமாக இருந்தது. இந்தியாவிலோ வைஸ்ராயின் சம்பளம் இந்திய சராசரிக் குடிமகனைவிட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருந்தது!
அந்த உரையில்தான் இந்தியாவின் கல்வி தொடர்பான தன் மனப்பதிவையும் காந்தியடிகள் தெரிவித்தார். காந்தியடிகளிடம் புள்ளிவிவரங்கள் இருந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பாரம்பரியக் கல்வி பற்றியும் அது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் அழிக்கப்பட்டது பற்றியும் இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் அவருக்குத் தெரியவந்திருந்தது.
பிரிட்டிஷாரின் தரப்பில் இருந்து காந்தியடிகள் சொன்ன கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் Auxiliary Committee of the Indian Statutory Commission-ன் சார்மன் பிலிப் ஹார்டாக் (Philip Hartog) அவர்களில் மிக முக்கியமானவர். 1918-ல் இருந்து 1930 வரையில் பிரிட்டிஷ் அரசு நியமித்த பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராகவும் பிலிப் இருந்திருக்கிறார். அந்த மாநாட்டிலேயே காந்தியடிகளைக் கேள்வி கேட்ட அவர் காந்தியுடன் மிகவும் விரிவாக கடிதப் போக்குவரத்தும் மேற்கொண்டார். காந்தியிடம் தன் கூற்றை நியாயப்படுத்தும்படியான ஆதாரங்களைக் கேட்டார்.
காந்தி சுதந்தரப் போராட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாலும் அடுத்த பல ஆண்டுகளை சிறையில் கழிக்க நேர்ந்ததாலும் அந்த ஆவணங்களைச் சேகரிப்பது சிரமமானதாக இருந்ததாலும் காந்தியால் கடைசிவரை தன் கூற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தியடிகள் கல்வி தொடர்பாகச் சொன்ன விஷயங்கள் இரண்டு. இந்தியாவில் பாரம்பரியக் கல்வி சிறப்பாக இருந்தது என்பது முதலாவது விஷயம். அதை பிலிப் கேள்விகேட்கவில்லை. ஏனென்றால், அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தன. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு இந்திய பாரம்பரியக் கல்வி எனும் அழகிய மரம் அழிந்துவிட்டது என்ற காந்தியின் இரண்டாவது வாக்கியத்தைத்தான் பிலிப் மறுத்தார். அதற்கான ஆதாரங்களைத்தான் அவர் கேட்டார்.

யங் இந்தியா-வில் பஞ்சாபின் கல்வி நிலை பற்றிய பஞ்சாப் அரசாங்க அறிக்கைகளில் இருந்து இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று காந்தி பதில் சொன்னார். பஞ்சாபின் நிலையை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையையும் சொல்லிவிடமுடியுமா? காஷ்மிரிலும் ஹைதராபாத்திலும் பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகளைவிட கல்வி குறைவாக இருப்பதன் காரணம் என்ன என்று ஹார்டாக் கேட்டார்.

காஷ்மிரில் கல்வி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு அங்கு இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று காந்தி யூகமாக ஒரு பதில் சொன்னார். அப்படியானால், ஹைதராபாத்தில் இந்துக்கள்தானே அதிகம். அங்கு ஏன் கல்வி விகிதம் குறைவாக இருக்கிறது என்று மடக்கினார் ஹார்டாக்.
தான் சொன்ன பதில் ஒரு யூகம் தானே தவிர இது பற்றி தெளிவான விரிவான பதிலை உங்களுக்கு நிச்சயம் சொல்கிறேன். பிரிட்டிஷாரால் இந்திய பாரம்பரியக்கல்வி சீரழிந்தது என்ற என் கூற்று ஒருவேளை தவறாக இருக்குமானால், அந்தச் செய்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைத்ததோ அதைவிடப் பெரியதொரு சபையில் என் மன்னிப்பைக் கேட்கிறேன் என்று காந்தி உறுதி அளித்தார். அதேநேரம் என் கருத்தை மறுக்கும்வகையில் உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை எனக்கு அறியத் தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, ஹார்டாக் புள்ளிவிவரத்தை அளித்தார். 1929-ல் பிலிப் ஹார்டாக் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சேர்மனாக இருந்தபோது சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை காந்திக்கு அனுப்பிவைத்தார்.
இந்தியாவில் கல்வி பெற்றவர்களின் சதவிகிதம் 1911-ல் 12%. 1881-ல் அது 8%தான். 12 % என்பது பெரிய அளவு இல்லைதான். என்றாலும் எட்டு சதவிகிதத்தைவிட அதிகம்தானே. பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியாவில் கல்வி குறையவில்லை. அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது என்று ஹார்டாக் சொன்னார்.
உண்மையில் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்துவிட்டுத்தான் ஆங்கிலக் கல்வி புகுத்தப்பட்டது என்ற வகையில் இது உண்மையில் வளர்ச்சியே அல்ல என்பது வேறு விஷயம். ஆனால், காந்தி தனது நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளாலும் சிறையில் அடைக்கப்பட்டதாலும் ஹார்டாகுக்கு பதில் அளிக்க முடியவில்லை. தனது சீடர் மகாதேவ் தேசாயிடம் யங் இந்தியா- இதழில் வெளியான பஞ்சாப் கல்வி அறிக்கை பற்றி ஹார்டாகுக்கு அனுப்பித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தவுலத் ராம் குப்தா எழுதிய தி டிக்ளைன் ஆஃப் மாஸ் எஜுகேஷன் இன் இந்தியா என்ற கட்டுரையை ஹார்டாகுக்கு அனுப்பிவைத்தார்.
அந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள்:பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் நமது கல்வியின் தரம், பள்ளிகளின் எண்ணிக்கை, அறிஞர்களின் என்ணிக்கை அதிகரித்ததாகப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மையல்ல. உண்மையில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கல்வியின் வீச்சு குறுகியது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் இருந்துவந்த கல்வி மிகவும் பாரம்பரியமானது, மதம் சம்பந்தப்பட்டது என்பது பிரிட்டிஷாருக்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் இருந்த மசூதிகள், கோயில்களில் எதிலும்  பள்ளி இணைக்கப்படாமல் இருந்திருக்கவில்லை. கல்வி அளிப்பதும் பெறுவதும் மதம் சார்ந்த ஒரு கட்டாயமான கடமையாகவே இருந்தது. உயர் சாதியினர் மிகுதியாக இருந்த பகுதிகளில் சமஸ்கிருதத்தில் இலக்கணம், தர்க்கம், தத்துவம், சட்டம் போன்றவை கற்றுத்தரப்பட்டன. கீழ் சாதியினர் இருந்த பகுதிகளில் கல்வியானது சிறு வணிகர்கள், நில உடமையாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பூசாரி இருந்தார். அந்தப் பகுதி மக்களுக்குக் கல்வி தரும் பொறுப்பு அவருடையதாக இருந்தது.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை கல்வியானது மசூதிகள் மூலமாகவும் அறிஞர்கள் மூலமாகவும் தரப்பட்டன. இஸ்லாமிய பள்ளிகளில் இலக்கணம், தர்க்கம், இலக்கியம், நீதி, விஞ்ஞானம் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அரசுகள் நிதி உதவி செய்தன. அல்லது செல்வந்தர்கள் நன்கொடைகள் தந்தனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க  ஒவ்வொரு கிராமத்திலும் நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 1835 வாக்கில் டபிள்யூ ஆடம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பிரிட்டிஷ் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சாட்லர் கமிஷன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் அரசின் நோக்கம் வெகு தெளிவாக இருந்தது. மேல்தட்டு மக்கள் மத்தியில் மேற்கத்திய கலாசாரத்தையும் கல்வியையும் திணித்தால் அது அப்படியே கீழ்த்தட்டு மக்களுக்கு இறங்கிச் செல்லும் என்று தீர்மானித்திருந்தனர். எனவே, அதுவரை பாரம்பரியக் கல்விக்கூடங்களுக்கு தரப்பட்டுவந்த அனைத்து நிதி ஆதாரங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு புதிய மேல் நிலைக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வித்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்த சங்கரன் நாயர் தனது புகழ் பெற்ற அறிக்கையில் பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தங்கள் இந்தியப் பாரம்பரியக் கல்வியை எப்படியெல்லாம் பாதித்தன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சர் பட்டம் பெற்ற அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தன் கருத்தைப் பதிவு செய்தது என்பது உண்மையில் மிகவும் அரிதாக நடந்த விஷயம். பெரும்பாலும் பிரிட்டிஷார் தமக்கு செல்லப் பிள்ளைகள் யார் என்று பார்த்துத்தான் தட்டிக்கொடுப்பார்கள். சங்கரன் நாயர் அவர்களில் முக்கியமான விதிவிலக்காக இருந்தார்.
பிரிட்டிஷ் அரசு மேல்நிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டாவதாக கல்வியின் கட்டணத்தை வெகுவாக அதிகரித்தது. இதனால், முன்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்துவந்த கல்வியானது நின்றுபோனது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் ஏழைகள் படிக்க முடியாமல் போனது குறித்து கேள்விகள் எழுப்பபட்டபோது அவ்வகையான (பிரிட்டிஷார் தரும்) கல்வியைப் பெற ஏழைகளுக்கு எந்த அவசியமும் இல்லை என்ற விட்டேத்தியான பதிலே கிடைத்தது. இப்படியாக கல்வியானது செல்வந்தர்களுக்கு மட்டுமேயானதாக பிரிட்டிஷாரால் ஆக்கப்பட்டது. உயர் சாதியினருக்கும் குமாஸ்தா பணிக்குத் தேவையான கல்வி மட்டுமே தரப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷார் தெளிவாகவே இருந்தனர்.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷாருக்கும் அவர்களுடைய வழிகாட்டிகளுமான கிறிஸ்தவ மத போதகர்களுக்கும் இந்து மதத்தின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. அவர்கள் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் சாதியினருக்கும் பேருதவி புரிந்ததாக நம்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பிரிட்டிஷார் அந்தப் பிரிவினரே அதிக அளவில் கல்வி பெறும் வகையில் வழி செய்திருக்க வேண்டும். தங்களுடைய அரசியல் கோட்பாடுகளுக்கு இணங்க பிராமணரல்லாதாருக்குத்தான் முழுக்க முழுக்க கல்வியைத் தந்திருக்கவேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. இங்குதான் அவர்களுடைய தந்திரம் உச்சத்தை எட்டுகிறது. அவர்கள் தலையையும் உடம்பையும் ஒன்றுக்கொன்று எதிராகத் திருப்ப நினைத்தார்கள். தாங்கள் இந்தியாவை விட்டுப் போன பிறகும் இந்தியர்கள் தமக்குள் சண்டையிட்டு வரவேண்டுமென்றால் இப்படியான திருகல் அவசியம் என்று நினைத்தனர். அதையே நடைமுறைப்படுத்தவும் செய்தனர்.
அப்படியாக அடிப்படைக் கல்வியானது அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது; அதி உயர் கல்வியானது மேல்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது. உயர் கல்வி, ப்ரொஃபஷனல் கல்விகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்பக் கல்விகள் போன்றவை எல்லாம் பிரிட்டிஷாரின் தொழிற்சாலைகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும் உயர் பதவிகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளை நியமிக்கும் வகையிலுமே அமைக்கப்பட்டன.
இந்தியாவின் கல்வி பற்றிய வரலாறை எழுதுவது தொடர்பாக சங்கரன் நாயர் சொன்னதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: வேட்டையாடியவர் வரைந்த சித்திரத்தை வைத்தே வேட்டை பற்றி நாம் இதுவரை புரிந்துகொண்டுவந்திருக்கிறோம். வேட்டையாடப்பட்ட மிருகம் ஓவியராக இருந்து வரைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதுதான் வேட்டை பற்றிய உண்மைநிலையை நாம் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
(தொடரும்)
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக